பள்ளிகள் விடுமுறை; ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் நெரிசல்.. காத்திருந்து தரிசனம்
ராமேஸ்வரம்: விடுமுறை தினம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பெரிதும் பாதித்தனர்.
பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் ரூ.200 கட்டணம் வரிசையில் சுவாமி, அம்மனை தரிசிக்க பக்தர்கள் ஒன்றரை மணிநேரம் காத்திருந்தனர். இதில் சுவாமி சன்னதி பின்புறமாக தடுப்பு வேலியில் வரும் போது மின்விசிறி, குடிநீர் வசதி இல்லாமல் பக்தர்கள் வியர்வையில் நனைந்து, குழந்தைகள் அழுதபடி சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டது. தரிசனத்திற்கு பக்தரிடம் பணம் பறிக்கும் கோயில் நிர்வாகம், அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க முன்வராதது வேதனைக்குரியது என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.