பரவை முத்துநாயகி அம்மனுக்கு அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1044 days ago
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா செப்.,26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நேற்று முன்தினம் விநாயகர் கோயில் முன்பும், நேற்று முத்துநாயகி அம்மன் கோயில் முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பறவை காவடி, அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (அக்.,4) காலை அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு, பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுக்கின்றனர். அக்.,6ல் முளைப்பாரி ஊர்வலம், 7ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.