தைப்பூசத்திற்காக பழனிக்கு புறப்பட்ட 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடிகள்
காரைக்குடி; குன்றக்குடியிலிருந்து பாரம்பரிய நகரத்தார் காவடிகள் நேற்று பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டது.
ஆண்டுதோறும் பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு, நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா வருகின்ற பிப்.1ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடியை வந்தடைந்தனர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து, நேற்று காலை, இடும்பன் வேல் முன்னதாக செல்ல 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக சென்றனர். பிப். 3ம் தேதி காவடிகள் பழனிக்கு சென்றடைகிறது. பிப்.3ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.7ம் தேதி காலை, காவடி விடைபெற்று ஊர் திரு முதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதேபோல், பாரம்பரியமாக காவடிகள் எடுத்துச் செல்லும், 200 நாட்டார் காவடிகள் நேற்று குன்றக்குடியில் இருந்து பழனிக்கு புறப்பட்டது.