திருவண்ணாமலை தீப திருவிழா; வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி உலா
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவின், 6ம் நாள் விழாவில் நடந்த, வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலாவை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கியது. இன்று நடந்த, 6ம் நாள் விழாவில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், காலை, 10:00 மணிக்கு, மூஷிக வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் (உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்), வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவபெருமானுக்கு தொண்டு செய்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், அவர்களின் மாடவீதி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.