உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்

கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்

திருப்பூர்: கோவில்களை விட்டு ஹிந்து சமய அறநிலையத்துறையை வெளியேற்ற, ஹிந்துக்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும் என, திருப்பூரில் நடந்த ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே, சசூரி கல்லுாரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஸ்ரீராம ஜென்ம பூமி வெற்றி வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்டார். சசூரி கல்லுாரி நிறுவனர் கந்தசாமி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

ஹிந்துக்கள் அனைவரும், கோவிலை விட்டு ஹிந்து சமய அறநிலையத்துறையை வெளியேற்ற போராட முன்வருதல், தீவிரவாதிகள் விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், தீவிரவாத செயல்கள் தலைதுாக்காத வகையில் தமிழகத்தை பாதுகாக்க போலீசாரும், தமிழக அரசும் முன்வர வேண்டும்.

நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசி நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் தி.மு.க.,வின் செயலை கண்டித்தல், பழநி, திருச்செந்துார் துவங்கி ஸ்ரீரங்கம் கோவில் வரை பக்தர்கள் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடைய ஊழியர்கள், அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தென் பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச்செயலர்கள் முருகானந்தம், பரமேஸ்வரன், அரசுராஜா, கிஷோர்குமார், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !