மார்கழி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிவசிவ கோஷத்துடன் புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம்; மார்கழி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று மார்கழி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் இறங்கி சிவசிவ என கோஷமிட்டு புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன்பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் மற்றும் அக்னி கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.