மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; குவிந்த பக்தர்கள்
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 11 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அங்காளம்மனை சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வடந்த தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 12 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இதில் விழுப்புரம் கலெக்டர் பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.