தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குடியரசு தினம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் அக்னி தீர்த்த கடற்கரை வரை மற்றும் கோயில் ரத வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் குவிந்தனர். இங்கு வாகனம் நிறுத்த கார் பார்க்கிங் இல்லாமல் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசலில் சுற்றுலா பயணிகள் சிக்கி அவதிப்பட்டனர்.