ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம் : பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். இதில் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும், தீர்த்த கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சுற்றுலா நிதியில், ராமேஸ்வரம் நகராட்சி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப் அமைத்தது. இந்த சிலாப் சூறாவளி காற்றில் வீசும் ராட்சத அலைக்கு தாக்கு பிடிக்காது என ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் வீசிய ராட்சத அலையால் சிலாப்புகள் சேதமடைந்து, தாறுமாறாக கிடக்கிறது. இதன்வழியாக பக்தர்கள் இறங்கி புனித நீராட முடியவில்லை. மேலும் அமாவாசை, விடுமுறை நாளில் கூட்ட நெரிசலில் இவ்வழியாக நீராட செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் சிலாப்புகளை அகற்றி, கடற்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.