செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு உற்சவத்துக்கு, நேற்று இரவு, 7 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதற்கு, தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு தலைமை வகித்தார். முன்னதாக, நெம்மாரா சகோதரிகளின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு நடக்கும் சங்கீத உற்சவம், நாளை, 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. டி.வி.கோபாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ் உட்பட பிரபல இசை கலைஞர்கள் கலந்து கொண்டு சங்கீத ஆராதனை நடத்துகின்றனர். வரும், 21ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.