ஓங்காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
ஈரோடு: ஈரோடு பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.ஈரோடு கோட்டை, பெரியபாவடியில் ஓங்காளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சியம்மன், அபிராமி அம்மன், வைஷ்ணவி, சாமூண்டீஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.ஐந்தாவது நாளையொட்டி, தனலட்சுமி அலங்காரத்தில், பத்து லட்சம் ரூபாயில், ஓங்காளியம்மனுக்கு அலங்காரமும், காசிவிசாலாட்சி அலங்காரமும் செய்யப்பட்டது.நேற்று, ஓங்காளியம்மனுக்கு, மகிசாசுரவர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது. மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகளில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், நவதானியங்களில் முளைப்பாரி எடுத்து, பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர்அங்கமுத்து, சம்பத்குமார், குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.