நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்
நத்தம், நத்தம் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த பிப்12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். விழாவில் பக்தர்கள் அங்கபிரதட்சனம், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில், பொங்கல் வைத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இந்தநிலையில் நேற்று காலை அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அம்மன் குளத்தில் இருந்து எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆங்காங்கே வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று பிப்.29 அதிகாலையில் கோவிலை அம்மன் சென்றடைந்தவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.