ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே ஒழுகைமங்கலத்தில் பழமை வாய்ந்த சீதளாபரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேர் நான்கு விதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து உதிரவாய் துடைப்பு, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. முன்னதாக அம்மனுக்கு பால், தேன், சந்தனம், இளநீர், மஞ்சள்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.