உலுப்பகுடி முத்தாலம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்
நத்தம், நத்தம் அருகே உலுப்பகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கடந்த ஏப்.25 காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் தோரண மரம் ஊன்றுதலை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று காலையில் பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பூத்தட்டு,மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.பின்னர் நேற்று மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.