கடும் வெயிலால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு
தேவிபட்டினம்; தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், குழந்தை பாக்கியம், திருமணத்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், நவ பாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. குறிப்பாக காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெயில் தாக்கத்தால் பக்தர்கள் வருவதில்லை. நவபாஷாணம் வருகை தரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வந்து நவபாஷாணத்தில் தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.