கருமலை கோயிலுக்கு சிங்கம்புணரியில் தயாரான 260 அடி நீள தேர் வடம்
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் 1200 கயிறு பீஸ்களை கொண்டு 260 அடி நீள தேர் வடம் தயாரித்து அனுப்பப்பட்டது.
சிங்கம்புணரியில் பல்வேறு கோயில்களுக்கு தேர் வடக்கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டம் கருமலை ஹரிகிரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்திற்கான வடக்கயிறு தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. சேவுகப்பெருமாள் கோயில் ரத வீதியில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 10 நாட்களாக வடக்கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மூர்த்தி, தேர் வட தயாரிப்பாளர்; இங்கிருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு பல்வேறு நீள, அகலங்களில் வடக்கயிறுகளை தயாரித்து அனுப்புகிறோம். தற்போது கருமலை கோயிலுக்கு 260 அடி நீளம் கொண்ட தேர் வட கயிறை தயாரித்து அனுப்புகிறோம். இதற்காக 1.5 டன் எடை கொண்ட 1200 கயிறுகளை பயன்படுத்தியுள்ளோம். வடம் தயாரிப்பில் பெண்களே அதிகம் ஈடுபடுகிறோம். கயிறை முறுக்க மட்டும் ஆண் தொழிலாளர்கள் உதவுகிறார்கள். அனைவரும் பயபக்தியுடன் விரதம் இருந்தே தேர் வடம் தயாரிப்பில் ஈடுபடுவோம். சாரக்கயிறு உள்ளிட்ட அனைத்து வகை கயிறுகளையும் உற்பத்தி செய்கிறோம்.