உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரபாடியில் 5 கோவில் கும்பாபிஷேகம்

சந்திரபாடியில் 5 கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை; சந்திரபாடியில் 5 கோவில் கும்பாபிஷேகம்; சூரியனார் கோவில் ஆதினம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில்  வசித்தி விநாயகர், காளியம்மன், செல்வ விநாயகர், பிடாரியம்மன், சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் ஆகிய 5 கோயில்களின்  திருப்பணிகள் பழமை மாறாமல் செய்து முடிக்கப்பட்டது.  தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து 5 கோவில்களின் விமானத்தை அடைந்தது. முதலில் வரசித்தி விநாயகர் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர்  ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து. காளியம்மன், செல்வ விநாயகர், பிடாரியம்மன், சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில்களின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக  நடைபெற்றது. அதனை அடுத்து  ஐந்து கோவில்களில் உள்ள  மூலவர்களுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும்   மகாதீபாரதனை நடத்தப்பட்டது. இதில் சூரியனார் கோவில் ஆதினம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !