நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா 2வது நாள்; சுவாமி, அம்பாள் வீதியுலா
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் நடந்துவரும் ஆனித்திருவிழாவில் 2வது நாளான நேற்று இரவு தினமலர் நிறுவனம் சார்பில் நித்யஸ்ரீ மகாதேவனின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. ‘திருநெல்வேலி’ எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் நேற்று முன்தினம் ஆனித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. 2வது நாளான நேற்று காலை வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதியுலா நடந்தது. திருவீதியுலாவின் போது வேத பாராயணங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்கின.
கலை நிகழ்ச்சி: இரவு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் முத்துவிஜய்ஸ்ரீ பக்தி சொற்பொழிவு, ஸ்ரீ ராம நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், முருக இளங்கோ பக்தி சொற்பொழிவு, அரசு இசைப்பள்ளி மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கர்நாடக இசை புகழ் நித்யஸ்ரீ மகாதேவனின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. பெங்களூர் ஜோத்ஸனா ஸ்ரீகாந்த் வயலின் இசை, கும்பகோணம் சரவணன் மிருதங்கம் இசை,
மலைக்கோட்டை தீனதயாளு, மோர்சிங் இசை ஆகியவை பின்னணியாக இசைக்கப்பட்டன.