உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா

பெரியபட்டினம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா

பெரியபட்டினம்; ராமநாதபுரம் மாவட்டம், பெரியப்பட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா விமர்சையாக நடந்து வருகிறது. 123ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 13 அன்று மாலையில் 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் பச்சை வண்ண பிறை கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நாள்தோறும் மாலை வேளையில் உலக நன்மைக்கான மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது. நேற்று மாலை 6:00 மணி முதல் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துவங்கியது. 35 அடி உயரமுள்ள பல்வேறு வண்ண மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சுற்றி சுழலும் கூட்டினை சுமந்தவாறு பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் சுமந்து வந்தனர். அதன் அருகே மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட மற்றொரு ரதத்தில் தென்னம்பிள்ளைகள் வைக்கப்பட்டிருந்தன. 10 நாட்டிய குதிரைகள் முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். நேர்த்திக்கடன் பக்தர்களால் மல்லிகை பூச்சரங்களை கூட்டின் மீது தூவினர். தர்காவை சுற்றி மூன்று முறை ரதங்கள் வலம் வந்தன. சீனியம்மாள், மகான் செய்யதலி, செய்யது அம்மாள் ஆகியவரின் புனித மக்பராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளித்து மல்லிகை சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெரியபட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர். இன்று பகல் கூடு நடந்தது. நெய் சோறு மற்றும் பிரியாணி அனைவருக்கும் வழங்கப்பட்டது. வருகிற ஜூலை 3 அன்று மாலையில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பெரியபட்டினம்‌ தர்கா சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !