சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டிற்கு 6 மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். அதில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடக்கும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பு வாய்ந்தது. இந்த இரண்டு விழாக்களின்போதும், தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை வழிப்படுவர். இந்தாண்டு ஆனித் திருமஞ்சன விழா, இன்று(3ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி காலை மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஆனி திருமஞ்சனம் நடக்கிறது. 13ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் விழா நிறைவடைகிறது.