பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் வருடாபிஷேக விழா
பரமக்குடி; பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 2021 ஜூன் 28ம் நாள் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு பின்னர் மண்டல அபிஷேக விழாவும், அதனைத் தொடர்ந்து நேற்று வருடாபிஷேக பூர்த்தி வைபவம் நடந்தது. இதன்படி காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, 10:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் புனித தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்தனர். தொடர்ந்து மூலவர் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகாவுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. மேலும் அலங்காரத்திற்கு பிறகு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணிக்கு கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தினரின், தேவார திருவாசக பதிகங்கள் பண்ணிசை நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்கள் செய்திருந்தனர்.