தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகத்தில் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நவபாஷாண கோயிலுக்கு வருகை தந்தனர். வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று, கடலுக்குள் புனித நீராடி, பின்பு நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். வருகை தந்த பக்தர்களுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி, எழுதத்தர் தங்கவேல் பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.