உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் முருகா கோஷங்களுடன் நிறைவு பெற்றது முத்தமிழ் முருகன் மாநாடு

பழநியில் முருகா கோஷங்களுடன் நிறைவு பெற்றது முத்தமிழ் முருகன் மாநாடு

பழநி; பழநியில் இரு நாட்கள் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2-வது நாளான நேற்று அமைச்சர் சக்கரபாணி தொடக்கவுரையாற்றினார். விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வெளியிட கவுமார மட ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு மாநாடு நிறைவு விழா நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அடியார்கள், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம்,இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 16 பேருக்கு விருது வழங்கினார். 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பக்தர்களின் முருகா கோஷங்களுடன் மாநாடு நிறைவுபெற்றது.


முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாகப் பழநியில் வேல் நிறுவுதல், கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.99.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் முதற்கட்ட பணிகளையும், ரூ.158.90 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பணிக விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, பழநி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாக்காலங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கான அன்னதானம் திட்டத்தை விரிவுபடுத்தி நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் வீதம் 20 நாட்களுக்கு 4,00,000 பேருக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கண்காட்சி அரங்கம் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஆக.,30 வரை தினமும் காலை 8:30 முதல் இரவு 7 :30 மணி வரை திறந்திருக்கும்.


பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு என 10 பொருட்கள் அடங்கிய பிரசாதப் பைகள் வழங்கப்பட்டன.


அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 1500க்கு மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பிக்க பட்ட நிலையில் 285 கட்டுரைகள் தேர்வாகி உள்ளன. சமர்ப்பித்தவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !