வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
வல்லபை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன், சங்கரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 5:00 மணி முதல் ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிவதற்காக நீண்ட வரிசையில் இருந்து மாலை அணிந்து சென்றனர். கோயில் தலைமை குருசாமி ஆர்.எஸ். மோகன், கன்னிசாமி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். ஐயப்ப சரணகோஷம் முழங்கப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செல்லும் வரையிலும் 48 நாட்களுக்கு தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் பஜனையும் கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடப்பதை போன்று இங்கும் பள்ளி வேட்டை, பேட்டை துள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.