கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
ADDED :445 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் கடந்த, 13ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. விழாவையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மனுடன், நேற்று கிரிவலம் சென்றார். வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள், அடி அண்ணாமலையில் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. தை மாதத்தில் நடக்கும் திருவூடல் திருவிழா மற்றும் தீப விழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். தொடர்நது, அய்யங்குளத்தில் நேற்றிரவு தெப்பம் உற்சவம் நடந்தது. இதில், பராசக்தி அம்மன் மூன்று முறை வலம் வந்தார். இந்நிகழ்விலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.