பக்திக்கு கட்டுப்படுபவன்!
ADDED :4722 days ago
அடியார்களும், புலவர்களும் இறைவனின் பாதத்திலிருந்து உச்சிமுடிவரை ஒவ்வொரு அங்கமாகப் போற்றிப் பாடுவர். இதனைப் பாதாதிகேச வர்ணனை என்பர். ஆனால், நம்மாழ்வார், இதற்கு நேர்மாறாக பெருமாளின் முடியிலிருந்து திருவடி வரை பாடினார். இதை கேசாதிபாத வர்ணனை என்பர். நம்மாழ்வார் இப்படி பாடக் காரணம் உண்டு. ஒருமுறை, அவர் பெருமாளை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். தியானம் கலைந்து பார்த்தபோது, அவர் அமர்ந்திருந்த இடத்தில் பெருமாளின் திருமுடியைக் கண்டார். அவர் அமர்ந்திருந்த நிலையில், பாதமே முதலில் கண்களில் பட்டிருக்க வேண்டும். ஆனால், தன்னையே சுருக்கிக் கொண்டு, பெருமாள் கிரீட தரிசனம் காட்டியதால், முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?, என்று பாடிவிட்டார். நிஜமான பக்திக்கு ஆண்டவன் கட்டுப்படுவான் என்பதற்கு இந்நிகழ்ச்சி உதாரணம்.