உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாத பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வெள்ளோட்டம்

அரங்கநாத பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வெள்ளோட்டம்

ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின் நடந்த புதிய தேர் வெள்ளோட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலுக்கு சொந்தமான தேர் முற்றிலும் பழுதானது. இதனால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டமே நடக்கவில்லை.இந்நிலையில் கோவில் பராமரிப்பு பணி, புதிய தேர் வடிவமைப்பிற்கு தமிழக அரசு கடந்தாண்டு நிதி ஒதுக்கியது. இதையொட்டி, ரூ.75.50 லட்சம் மதிப்பில், 15 அடி உயரம் கொண்ட திருத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று காலை 10:20 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தேர் வடம் பிடித்து இழுத்து, வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான மக்கள் தேரினை வடம் பிடித்து மாட வீதி வழியாக இழுத்து சென்றனர். தொடர்ந்து, தேர் கோவில் நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !