திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவ கொடியேற்றம்
ADDED :248 days ago
திருவள்ளூர்; திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா நேற்று விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. முதல் நாளான இன்று காலை, கொடியேற்றம் நடந்தது. காலையில் சப்பரத்தில், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிம்ம வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்தார். இரண்டாம் நாளான நாளை காலை ஹம்ச வாகனம், இரவு சூரியபிரபை ஊர்வலம் நடக்கிறது. தினமும் காலை – மாலை இருவேளையும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வருவார். விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், வரும் 31ம் தேதி நடக்கிறது. 12 நாள் நடைபெறும் விழாவில் காலை – மாலை வேதபாராயணமும், 30ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடக்கிறது.