திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்; வெள்ளிக்கவத்தில் சுவாமி
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
புதுச்சேரி, காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில், சனீஸ்வர பகவான் சன்னிதியில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று சனிக்கிழமை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி, நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்ட பின்னர் எள் தீபமேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.