ஆடி வெள்ளி, மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளிய்மமன் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம், ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பிளாஸ்டிக் கேன்களில் வைக்கப்பட்டது. வெயில் காரணமாக சிமெண்ட் தளம் சூடாகி விடுவதை தடுக்க அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட்டது. நண்பகல் ஒரு மணி உச்சிகால பூஜைக்காக ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.