உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் வழிபாட்டில் அப்பம், அவல், பொரி, மோதகம், தோப்புக்கரணம் ஏன் தெரியுமா?

விநாயகர் வழிபாட்டில் அப்பம், அவல், பொரி, மோதகம், தோப்புக்கரணம் ஏன் தெரியுமா?

எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் படைத்து  வணங்குகிறோம். இந்த படைப்புகளுக்குக் கூட காரணங்கள் இருக்கிறது. சைவத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு  நிலைகள் உண்டு. சரியை என்றால் பக்குவமில்லாத பக்தி என  பொருள். தற்போது நாம் மேற்கொள்வது சரியைதான். சைக்கிளில் சென்று  கொண்டிருக்கும் ஒருவன் அதில் இருந்தபடியே இறைவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு போய்விடுகிறான். இதை மரியாதை குறைவாக  எண்ணக்கூடாது. அவனுக்கு இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பது சரியாக சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்றே  எடுத்துக்கொள்ள வேண்டும்.


கனி: விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம், மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை  அடைந்துதான் ஆக வேண்டும்.  அதற்குரிய முன்னேற்பாட்டை நீ செய்துகொள். பொருள்தேடி அலைவதிலோ, 24 மணி நேரமும்  உழைப்பதிலோ எந்த தவறும் கிடையாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை நீ என்ன செய்திருக்கிறாய் என்று எண்ணிப்பார். உனது  மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் அந்த சொத்துக்களை எழுதி வைத்திருக்கலாம். இது உன் குடும்பத்திற்கு மட்டுமே ஆகும். ஆனால்,  இந்த உலகத்திற்காக நீ ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறான். குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய்தாயா  என யோசித்துப்பார். அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெனில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி  போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். அதாவது, உன் வாழ்க்கை அழிந்துபோகும். அதற்கு முன்னதாக நீ காய்  பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.


அவல்: விநாயகருக்கு அவல் படைக்கப்படுகிறது. அவலை அரிசியிலிருந்து தயாரிக்கிறோம். அது உரலில் அங்கும் இங்குமாக புரண்டு  மிகக்கடுமையாய் இடிபடும்.  எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது. அரிசி உரலுக்குள்  இடிபடுவதுபோல, மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என  வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான்  ஆகவேண்டும். அதற்காக இறைவன் மீது வருத்தப்படக்கூடாது. இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. வகுப்பறையிலுள்ள  உங்கள் பெஞ்சில் செல்லும் எறும்பை நீங்கள் நசுக்கக்கூடாது. கடிக்க வந்தாலும் தூர தள்ளி விட்டால் போதும். மீறி அடித்தால் அடுத்த  பிறவியில் இதே துன்பத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். எனவே துன்பங்களுக்கு காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று  குறிப்பிடுவதே அவல் படைப்பதின் தத்துவமாகும்.


அப்பம்:  அப்பம் மாவிலிருந்து தயார் செய்யப்படுகிறது.  மாவு முதலில் பக்குவப்படாமல் இருக்கிறது. அதை உருட்டி, இலையில் வைத்து  தட்டையாக்கி, எண்ணெய்ச்சட்டியில் போட்டு எடுக்கிறோம். பச்சை மாவு உருண்டை எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்ததும் சடசடவென  கொதிக்கும். பாவம் செய்த மனமும்  இதுபோல்தான் பதறித் துடிக்கும். எதற்கும் பயப்படும். பரபரப்பு அடையும். சற்று வெந்ததும் மாவின்  சத்தம் அடங்கி போகும். வாழ்க்கையிலும் அனுபவப்பட்டுவிட்டால் வெந்த அப்பத்தைப் போல மனம் பக்குவப்பட்டுவிடும். பக்குவப்பட்ட  மனமுடையவனுக்கு இறையருள் எளிதில் கிடைத்து விடும்.


பொரி: விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம் மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான். நெல்லை நிலத்தில் போட்டால்  முளைக்கும். அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது. நீ நெல் போல இருக்காதே; பொரியாக மாறிவிடு. பொரிக்கு  எப்படி வளரும் சக்தி கிடையாதோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகிவிடு, என்பதே  இதன் பொருள்.


தோப்புக்கரணம்: விநாயகருக்கு தினமும் 30 தோப்புக்கரணம் போடுவது சிறப்பானதாக அமைகிறது.  இவ்வாறு செய்தால் பக்கவாதம்  வராது. அறிவுச்சுடரை தூண்டுவதற்காகத் தான் தலையில் குட்டிக்கொண்டே தோப்புக்கரணம் போடுகிறோம். அது மட்டுமின்றி ஈகோ  எனப்படும் தாழ்வு, உயர்வு மனப்பான்மையை நீக்கி, சம உணர்வை உண்டாக்குகிறது.


மாவிலைத் தோரணம்: விநாயகர் சதுர்த்தி மற்றும் வீட்டு விசேஷங்களில்  மாவிலை தோரணம் கட்டுகிறார்கள். மாமரத்திற்கு கார்பன்  டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் உண்டு. ஒரு கோயிலுக்குள் கூட்டமாக மக்கள் நிற்கும்போது சுவாசத்தின் காரணமாக கார்பன்டை  ஆக்சைடை அதிகமாக வெளியிடுவார்கள். இதையே திரும்பத்திரும்ப சுவாசிப்பதால் உடலுக்கு கேடு உண்டாகும். மாவிலைகள்  கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி விடும்.  மங்களகரமான வீடுகளில் மட்டுமின்றி, துக்கவீட்டிலும் மாவிலை தோரணம் கட்டுவதுண்டு.  அடையாளம் தெரிவதற்காக மாவிலையின் நுனியை துக்கவீடுகளில் மேல்நோக்கி கட்டுவார்கள். சுபகாரியம் நடக்கும் வீடுகளில்  கீழ்நோக்கி கட்டுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !