ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ர சாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ர சாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
இதை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு கோயிலில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு விசேஷ திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் கொடி பட்டம் மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வாசுதேவ பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் காலை மண்டபம் எழுந்தருளல், இரவு வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. செப். 29 மதியம் 3:45 மணிக்கு மேல் திருக்கல்யாணம் உற்ஸவம், அக். 2 காலை 7:40 மணிக்கு செப்பு தேரோட்டம், அக்.7 மாலை 5:30 மணிக்கு கோபால விலாசத்தில் புஷ்ப யாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.