காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி வைபவம்; பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம்
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெறும். இன்று புரட்டாசி மாத சுக்ல பட்ச, ஏகாதசி வைபவம் நடந்தது. ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு விஷ்வக்சேனர் ஆராதனம், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம் நடந்தது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. அரங்கநாத பெருமாள் பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை நடந்தது. பின்பு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலர்த்தார்கள், அர்ச்சகர்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர்கள் பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.