உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு செய்த கிராம மக்கள்

மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு செய்த கிராம மக்கள்

பல்லடம்; பல்லடம் அருகே, பெருமாகவுண்டம்பாளையம் கிராம மக்கள், மழை வேண்டி மழைச்சோறு எடுத்து வழிபாடு செய்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முறையாக கிடைத்தால் மட்டுமே, குடிநீர் தட்டுப்பாடு நீங்காவதுடன், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதும் சிரமம் இன்றி நடக்கும். பருவ மழை பொய்க்கும் போது, விவசாயிகள், கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல்லடம் வட்டார கிராமங்களில் இது பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சி, பெருமாகவுண்டம்பாளையம் கிராம மக்கள், பருவமழை வேண்டி, மழைச்சோறு எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக, ஊர் பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றி, வீடு வீடாக சென்று மழைச்சோறு சேகரித்தனர். தொடர்ந்து, கும்மியாட்டம் பாடியபடி, மழைச்சோறு வேண்டி பிரார்த்தனை செய்தபடியும், பயணத்தைத் தொடர்ந்தனர். அங்குள்ள விநாயகர் கோவிலிற்கு சென்று சேகரித்த உணவு மற்றும் பொங்கல் வைத்து, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு செய்தனர். பொதுமக்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பல்லடம் பகுதியில் வரட்சி நிலவுகிறது. எனவே, மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு மேற்கொண்டோம். இதன் மூலம் மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையால், ஆண்டாண்டு காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !