திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா; யாகசாலை பூஜையுடன் துவக்கம்
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகன் கோவில்களில் இன்று முதல் 6வது நாள் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இந்த கந்த சஷ்டி விரதமானது, முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கும். குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து இந்த விரதம் இருந்தால், முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். இதையடுத்து, கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் 6 நாட்கள் சஷ்டி விரதமும், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் 27ம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதையடுத்து 28ம் தேதி முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது.