அன்னூர் மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.
லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் பழமையான ஈஞ்சங் குலத்தாரின் குலதெய்வமான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக முழுவதும் கருங் கற்களால் கருவறை, மகா மண்டபம், வசந்த மண்டபம் கட்டப்பட்டன. கும்பாபிஷேகம் கடந்த செப். 4ம் தேதி நடந்தது. மண்டல பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்தது. நிறைவு விழா நேற்று நடந்தது. காலையில் வேள்வி வழிபாடு நடந்தது. இதையடுத்து 108 சங்கு பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு மதுரகாளியம்மனுக்கு பால், தயிர், நெய், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேக பூஜையும் இதை எடுத்து சங்கு அபிஷேகமும் நடந்தது. மதியம் அலங்கார பூஜை நடந்தது. மதுர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.