உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் 16ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் 16ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.


இது குறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது: காஞ்சிபுரம், நசரத்பேட்டை வேகவதி ஆற்றங்கரையோர பகுதியில், நேற்று களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேகவதி ஆற்றங்கரையோரம், சதிகல் சிற்பம் ஒன்றை கண்டெடுத்தோம். இந்த சிற்பமானது, நடுகற்கள் வகையைச் சார்ந்தது. 25 செ.மீ., அகலம், 38 செ.மீ., உயரம் கொண்டது. தெற்கு திசை நோக்கி காணப்படும் இச்சிற்பத்தில், ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன. பட்டாடை உடுத்திய நிலையில் கை, தோள் மற்றும் மார்பு பகுதிகளில் அணிகலன்கள் காணப்படுகின்றன. இச்சிற்பத்தில் மற்ற சதிக்கற்களில் காணப்படாத ஒரு சிறப்பம்சமாக, இருவரின் காதுகளிலும் மிகப்பெரிய அளவிலான அணிகலன்கள் காணப்படுகின்றன. இது, இனக்குழு தலைவருக்கான சதிகல் நடுகலாக இருக்கலாம். இச்சிற்பம் கி.பி., 16ம் நுாற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !