கோர்ட் உத்தரவு; கோவிலை இடிக்க ஆயத்தம் பொதுமக்கள் எதிர்பால் பரபரப்பு!
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் இணைந்து, இங்குள்ள, 80 சென்ட் ரிசர்வ் சைட்டில், விநாயகர் மற்றும் வராகி அம்மன் கோவில் கட்டி வருகின்றனர். இதற்கிடையே, ரிசர்வ் சைட்டில் அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டு வருவதாக கூறி, திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த கோர்ட், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவின்படி, நேற்று காலை, வருவாய் துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். தகவல் அறிந்த இப்பகுதி பொதுமக்கள், கோவிலை இடிக்க விடமாட்டோம் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை இடித்து அகற்றுமாறு நவ. 4 அன்றே ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோர்ட் உத்தரவை மீறி செயல்படுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என, அதிகாரிகள் கூறினர். நவ.,25 வரை கோர்ட் அவகாசம் வழங்கி உள்ளது. நாங்களும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம் . மதியம், 1.30 மணிக்கு விசாரணை நடப்பதால், அதுவரை அவகாசம் கொடுங்கள் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மதியம், 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கோர்ட் விசாரணை 4.30 மணி வரை நீடித்ததால், அதிகாரிகள் அதுவரை காத்திருந்தனர். இதற்கிடையே, 4 வாரத்துக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாகவும்; அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கோர்ட் அறிவுறுத்தியது. கோர்ட் வழங்கிய நான்கு வார காலக்கெடுவுக்குள் அப்பீல் செய்து உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில், நீங்களே உங்களது சொந்த செலவில் கட்டுமானங்களை அப்புறப்படுத்தி தர வேண்டும் என, அதிகாரிகள் கூறினர். பொதுமக்களும் இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இப்பிரச்னை காரணமாக, நேற்று காலை முதல் மாலை வரை அய்யம்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.