திருச்சானூர் பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, கார்த்திகை மாதம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு பிரம்மோற்சவம் 17 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை பத்மாவதி தாயார் மோகினி அவதாரத்தில் பளபளக்கும் நகைகள் மற்றும் வண்ண வஸ்திரங்களுடன் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் திருமலையின் பீடாதிபதிகள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.