உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்காடு லட்சுமி நாராயணர் கோவிலில் பாலாலயம்

ஊத்துக்காடு லட்சுமி நாராயணர் கோவிலில் பாலாலயம்

வாலாஜாபாத்: ஊத்துக்காடில் பராமரிப்பின்றி பாழடைந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில், பல்லவர்களின் இறுதி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விஜயகம்பவர்மன், பராந்தகசோழன், ராஜராஜ சோழன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இக்கோவிலில் இருப்பது தொல்லியல் ஆய்வாளர்கள் வாயிலாக ஏற்கனவே கண்டறிப்பட்டுள்ளது. இக்கோவில், 100 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், முற்றிலும் பாழடைந்து கோவிலை சுற்றி பல வகையான செடி, கொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து உள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில் உள்ளே சென்று வழிபட முடியா மல் பயன்பாடு இல்லாத இடமாக இருந்தது. இந்நிலையில், இக்கோவிலை புனரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வர ஊத்துக்காடு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று, காலை 10:00 மணிக்கு அப்பகுதி ஊராட்சி தலைவர் சாவித்திரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. கோவிலை சுற்றி இருந்த செடி, மரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றிவிட்டு, கோவில் முன் யாகசாலை அமைத்து வாஸ்து சாந்தி, விக்னேஸ்வரா, நவக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !