புல் மேடு பாதையில் வரும் பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பஸ் வசதி
சபரிமலை; சத்திரம் - புல்மேடு பாதையில் வரும் சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் தொடர்ச்சியாக பஸ்களை இயக்குகிறது.
வண்டிப்பெரியாறு -சத்திரம் - புல்மேடு பாதை, தமிழக பக்தர்களுக்கு வசதியான ஒரு பாதையாகும். சன்னிதானத்துக்கு வரும்போது செங்குத்தான இறக்கத்தில் வரவேண்டும். இவர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் தொடர்ச்சியாக பஸ்களை இயக்குகிறது. வண்டிப்பெரியாறு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் 16 முறை இந்த பாதையில் பஸ்கள் இயங்கும். காலை 5.30 மணிக்கு குமுளி டிப்போவில் இருந்து முதல் பஸ் புறப்படும். சத்திரத்தில் இருந்து கடைசி பஸ் மாலை 6:00 மணிக்கு புறப்படும். தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த 16 கிலோமீட்டர் தூர ரோடு மிக குறுகியதும் பின் வளைவுகளை கொண்டதுமாக இருக்கிறது. இந்த தூரத்தை கடக்க சுமார் 40 நிமிடம் ஆகிறது. தினமும் பகல் 1:30 மணிவரை மட்டுமே சத்திரத்தில் இருந்து புல் மேடு பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு வசதியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றது.