ஆருத்ரா தரிசன திருவிழா: கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் நடந்தது.
கைலாசநாதர் சுவாமி நித்தியகல்யாணி அம்மன் கோவில் தேவஸ்தானத்த்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். டிச. 25ல் மாணிக்கவாசகருக்கு காப்புக்கட்டி விழாத் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்து வருகிறது. இன்று காலை 9.00 மணிக்கு கோயில் பிரகார மண்டபத்தில் சுவாமியும் அம்பாளும் மணக்கோலத்தில் எழுந்தருளினர். ஒக்கூர் விநாயகர் கோயிலிருந்து திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. திருமணயாக, ஹோமங்கள் நிறைவடைந்து காலை 10:00 மணி அளவில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மாலையில் மாணிக்கவாசகர் திருவீதி வலம் வந்தார். நாளை காலை 9.00 மணிக்கு மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் புறப்பாடு்ம். இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறும். 3ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் காலை காலை 8:50 மணிக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பு மகா தீபாரதனை நடைபெறும். தொடர்ந்து தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.