செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம்
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
செஞ்சி பீரங்கி மேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு செஞ்சி திருமறை கழகம் சார்பில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சந்தனம், பன்னீர், விபூதி, திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. காலை 9.00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. சிவனடியார்கள் தேவாரம், திருவாசக பாடல்களைப் பாடினர். கோலாட்ட குழுவினரின் நடனமும், கைலாய வாத்தியங்கள் இசைத்தனர். பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கினர். மாலை 6 மணிக்கு முக்கிய சாலைகள் வழியாக சாமி ஊர்வலம் நடந்தது. இதில் திருமறை கழக நிர்வாகிகள், அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.