திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர்கள் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகங்கள் முடிந்து தைலக்காப்பு சாத்துப்படியானது. உற்ஸவர்கள் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனைகளுக்குபின்பு காப்பு கட்டப்பட்டது. கோயில் ஓதுவார்கள் முத்து விநாயகம், முத்தையன் ஆகியோரால் திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டது. நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனி பூ சப்பரங்களில் எழுந்தருளி கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது.
* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காசி விஸ்வநாதர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் எழுந்தருளினர். 54 வகையான அபிஷேகங்கள், பூஜை நடந்தது. மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரமானது.
* திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது.