உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ‘மஹா தீப மை’ பிரசாதம் விற்பனை துவக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ‘மஹா தீப மை’ பிரசாதம் விற்பனை துவக்கம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம்,  பக்தர்களுக்கு  விற்பனை செய்யும் பணி, நேற்று முதல்  துவங்கியது. 


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில்,  2,668 அடி உயர, அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த டிச., 3ல், ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டது. இதற்காக, 4,500 கிலோ நெய், மற்றும் 1,150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, ஐந்தரை அடி உயர கொப்பரையில் ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டு, 11 நாட்கள், தொடர்ந்து எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து  சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம்,  கடந்த, 3ல் ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட  தீப மையுடன்,    வேம்பு இலை மற்றும் கட்டை, தர்ப்பை,  மா இலை மற்றும் மாங்குச்சி கட்டை, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்த்து அதனுடன், சுவாமி அபிஷேக  விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, ‘மஹா தீப மை’ பிரசாதம் தயாரிக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 


இதையடுத்து நேற்று முதல்,  பக்தர்களுக்கு, ‘மஹா தீப மை’ விற்பனை செய்யும் பணி தொடங்கியது.  இந்த, தீப மை பிரசாதத்தை  பக்தர்கள் அணிவதால், ஏவல், பில்லி, சூனியம், போன்றவை தாக்காமல், காரிய சித்தி பலனும் கிடைக்கிறது என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த பிரசாதம், மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, பத்து கிராம் கொண்ட தீப மை பிரசாதம், விபூதி, மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து  இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்களுக்கு, பத்து ரூபாய் கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !