காரமடை அரங்கநாதர் கோவிலில் மார்கழி ஏகாதசி சிறப்பு வழிபாடு
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெறும். இன்று மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலசந்தி பூஜைக்கு பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அரங்கநாத பெருமாள் மட்டும் திருக்கோவிலை வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். பின்பு உச்சக்கால பூஜை, சாற்றுமுறை ஆகியவை நடந்தன. இதில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.