ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் விமரிசை
ADDED :100 days ago
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு தனுர்மாத சிறப்பு பூஜையும், பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. கோவில் வளாகத்தில் திருக்கல்யாண சிறப்பு ஹோமமும், ஆண்டாள், பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி உலா வந்தனர்.
தொடர்ந்து பெருமாள், ஆண்டாளுக்கு திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், ஏரிவாய், முத்தியால்பேட்டை, அஞ்சூர், அய்யன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் பங்கேற்றனர்.