உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காட்டில் சிவனுக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து பூஜை: பக்தர்கள் பரவசம்

திருவெண்காட்டில் சிவனுக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து பூஜை: பக்தர்கள் பரவசம்

மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது. 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்றதும், 3 தீர்த்தம், 3 மூர்த்திகள், 3 அம்பாள் அமையப்பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில் பொங்கல் தினத்திற்கு மறுநாள்  சிவபெருமான் நலமுடன் இருக்க பார்வதி தேவி கணு வைத்து பூஜித்ததாக ஐதீகம்.  இந்நிகழ்வை போற்றும் வகையில்  ஒவ்வொரு ஆண்டும் இந்த கணு பொங்கல்  சிறப்பு பூஜை நடைபெறுகிறது.  பொங்கலுக்கு மறு தினமான தை இரண்டாம் தேதி ஆன இன்று சந்திர தீர்த்தக்கரையில் கலசத்தில் சுக்கிரவார அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்து, பொங்கலிட்டு, செங்கரும்புடன் சௌபாக்கிய பொருட்களான மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு முதலியவற்றை வைத்து அம்பாளுக்கு நைவேத்தியம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை அம்பாளுக்கு புரோக்ஷணம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சௌபாக்கியம் வேண்டி அம்பாளை பிரார்த்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !