விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி பிரம்மோற்சவம்; ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்றம்
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி, ஆழத்து விநாயகர் கோவிலில் இன்று கொடியேற்றம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டு மாசி மக திருவிழா கடந்த 1ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன் எழுந்தருளினார். அதன்பின், சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. வரும், 21ம் தேதி விருத்தாம்பிகை பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்ரவர் சுவாமிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, வரும் பிப்.,26ம் தேதி 6ம் நாள் உற்சவமாக விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. வரும் மார்ச் முதல் தேதி தேர்த்திருவிழா, 2ம் தேதி மாசிமகம், 3ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. வரும் 4ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், வரும் 5ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்பரம், வரும் 14ம் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவுடன் மாசிமக பெருவிழா நிறைவடைகிறது.