சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சீட்டணஞ்சேரி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடைசியாக, 2005ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் காளீஸ்வரர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன் மற்றும் இதர சன்னிதிகளுக்கும், ராஜகோபுரம் போன்றவைக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து, கோவில் கட்டடங்கள் பழுது பார்த்தல், கோவில் மூல ஸ்தானங்களில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட ஐந்து நிலை கோபுரங்களுக்கும் வர்ணம் தீட்டுதல், தரைதளம் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 18ம் தேதி முதல் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
இன்று, காலை 10:00 மணிக்கு ராஜ கோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.